திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
நான்காம் திருமுறை
4.42 திருத்துருத்தி (குத்தாலம்)
பண் - கொல்லி
பொருத்திய குரம்பை தன்னைப்
    பொருளெனக் கருத வேண்டா
இருத்தியெப் போதும் நெஞ்சுள்
    இறைவனை ஏத்து மின்கள்
ஒருத்தியைப் பாகம் வைத்தங்
    கொருத்தியைச் சடையில் வைத்த
துருத்தியஞ் சுடரி னானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
1
சவைதனைச் செய்து வாழ்வான்
    சலத்துளே யழுந்து கின்ற
இவையொரு பொருளு மல்ல
    இறைவனை ஏத்து மின்னோ
அவைபுர மூன்றும் எய்தும்
    அடியவர்க் கருளிச் செய்த
சுவையினைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
2
உன்னியெப் போதும் நெஞ்சுள்
    ஒருவனை ஏத்து மின்னோ
கன்னியை ஒருபால் வைத்துக்
    கங்கையைச் சடையுள் வைத்துப்
பொன்னியின் நடுவு தன்னுள்
    பூம்புனல் பொலிந்து தோன்றுந்
துன்னிய துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
3
ஊன்றலை வலிய னாகி
    உலகத்துள் உயிர்கட் கெல்லாந்
தான்றலைப் பட்டு நின்று
    சார்கன லகத்து வீழ
வான்றலைத் தேவர் கூடி
    வானவர்க் கிறைவா வென்னுந்
தோன்றலைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
4
உடல்தனைக் கழிக்க லுற்ற
    உலகத்துள் உயிர்கட் கெல்லாம்
இடர்தனைக் கழிக்க வேண்டில்
    இறைவனை ஏத்து மின்னோ
கடல்தன்னில் நஞ்ச முண்டு
    காண்பரி தாகி நின்ற
சுடர்தனைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
5
அள்ளலைக் கடக்க வேண்டில்
    அரனையே நினைமி னீணர்கள்
பொள்ளலிக் காயந் தன்னுட்
    புண்டரீ கத்தி ருந்த
வள்ளலை வான வர்க்குங்
    காண்பரி தாகி நின்ற
துள்ளலைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
6
பாதியில் உமையாள் தன்னைப்
    பாகமா வைத்த பண்பன்
வேதியன் என்று சொல்லி
    விண்ணவர் விரும்பி ஏத்தச்
சாதியாஞ் சதுர்மு கனுஞ்
    சக்கரத் தானுங் காணாச்
சோதியைத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
7
சாமனை வாழ்க்கை யான
    சலத்துளே யழுந்த வேண்டா
தூமநல் லகிலுங் காட்டித்
    தொழுதடி வணங்கு மின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத்
    தொன்னெறி பலவுங் காட்டுந்
தூமனத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
8
குண்டரே சமணர் புத்தர்
    குறியறி யாது நின்று
கண்டதே கருது வார்கள்
    கருத்தெண்ணா தொழிமி னீணர்கள்
விண்டவர் புரங்கள் எய்து
    விண்ணவர்க் கருள்கள் செய்த
தொண்டர்கள் துணையி னானைத்
    துருத்திநான் கண்ட வாறே.
9
பிண்டத்தைக் கழிக்க வேண்டிற்
    பிரானையே பிதற்று மின்கள்
அண்டத்தைக் கழிய நீண்ட
    அடலரக் கன்றன் ஆண்மை
கண்டொத்துக் கால்வி ரலால்
    ஊன்றிமீண் டருளிச் செய்த
துண்டத்துத் துருத்தி யானைத்
    தொண்டனேன் கண்ட வாறே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com